×

தாணுமாலயசுவாமி கோயில் மார்கழி திருவிழா: சுசீந்திரத்தில் மக்கள்மார் சந்திப்பு கோலாகலம்

சுசீந்திரம், டிச.14: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் திருவிழாவன்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிகர் வாகனத்தில் திருவீதியுலா நடந்தது. இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.  3ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி புஷ்பக விமானத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.30 மணிக்கு சுவாமி காசிமடம் மண்டக படிக்கு எழுந்தருளல், இரவு 10 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி, அம்பாளும் திருவீதியுலா நடந்தது. இரவு 10.30 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் திருவிழாவில் பங்கெடுக்க தனது தாய், தந்தையரை சந்திக்கும் ‘மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி’ நடந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது சுவாமியையும், அம்பாளையும் பிள்ளைகள் 3 முறை வலம் வந்து, பின்னர் கோயிலுக்குள் சென்றனர். இதை காட்சியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 4ம் நாள் திருவிழாவில் இன்று 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலியில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழச்சி நடக்கிறது. 5ம் திருவிழாவில் நாளை அதிகாலை 6 மணிக்கு கருட தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 9ம் திருவிழாவான 19ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.

Tags : Thanumalayaswamy Temple Markazhi Festival ,Suchindram ,
× RELATED சித்திரை திருவிழா 7ம் நாள்;...